Running News

Tuesday 30 April 2013


புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !

                                                                              


                         
                       


















  இளைஞர்கள் தெரிந்து கொள்ள ' மே தின' வரலாறு 

                                     பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் 


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும்
 வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும்
 நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய
 நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் 
ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் 
தோன்றிய 'சாசன இயக்கம்' (CHARTISTS ) என்பதாகும்.      சாசன இயக்கம்
 ஆறு  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்
 இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை
 கோரிக்கை.

பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், 
 தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். 
இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை
 நடத்தினர். 1834 ல் 'ஜனநாயகம்' அல்லது 'மரணம்' என்ற கோஷத்தை 
முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  இவையனைத்தும்
 தோல்வியில் முடிவ டைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த
தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை 
கோரிக் கையை முன்வைத்து 1856 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு,
 வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் 
மைல் கல்லாக அமைந்தது.

அமெரிக்காவில் 1832ல் போஸ்டனில், கப்பலில் பணியாற்றிய
 தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து
 வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835 ல் பிலடெல்பியாவிலும், 
பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து
 இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் 
தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை
 நேரத்தை வலியுறுத்தி 1877 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                                                  மாபெரும் வேலை நிறுத்தம் 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள
 தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர்
 கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம்
 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை
 நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை
 நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே
மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்வாக்கி,
 சின்சினாட்டி, பால்டிமோர், டெட்ராய்ட்  என அமெரிக்கா முழுவதும்
 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள 
தொழிலாளர்கள்
 பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை
 நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
 இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 
தொழிலாளர்களின்  பேரணி  அமெரிக்காவை உலுக்கியது. மிக்சிகனில்
மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில்  70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
 தொழிலாளர்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

                                                        சிக்காகோ  பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வெஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” 
வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு 
கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில்
 நான்கு  தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப்
 பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில்  ஹே மார்க்கெட்
 சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை
  தொழிலாளர்கள் அறிவித்தனர் . இது அரசினால் தடை செய்யப் பட்டது .
 தடையையும் மீறி  2500 தொழிலாளர்கள் பேரணியாக ஹே மார்கெட் நோக்கிச்
 சென்றனர்.  
இந்நேரத்தில் காவல்துறையினர் ஏவி விடப்பட்டனர்.  அனைவரையும்
 கலைந்து செல்லுமாறு காவல் துறை  அறிவித்தது  . இவ்வேளையில்
 திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே
 ஒரு காவலர் பலியானார். இதனால் கலவரமடைந்த  போலீசார் 
கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களைத் 
 தாக்கினர்.  துப்பாக்கிச் சூட்டில்  20 க்கும் மேற்பட்ட தோழர்கள்
 பலியாயினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து 
 தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. இதன் முடிவாக 
 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

                                                  அமெரிக்காவின் கருப்பு தினம் 

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், 
ஆல்பிரட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர்
  தூக்கிலிடப்பட்டனர். இது அமெரிக்காவின் கறுப்பு தினமாக
 தொழிலாளர்களால் அறிவிக்கப் பட்டது.  நவம்பர் 13, 1887 அன்று
 நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. 
நாடு முழுவதும் ஐந்து  லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து 
கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு  நிறமேந்தி  கண்டனக்
 குரல் எழுப்பினர் .அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர 
வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான்
 இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

                                அனைத்துலக தொழிலாளர்  போராட்டம் 

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின்
 ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 
400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
 உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய
 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்,
 சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 
அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட 
வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.உலகத் தொழிலாளர்கள் 
அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்க
வேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறைகூவலே 
மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப் 
பிடிப்பதற்கு  வழிவகுத்தது.

இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், 
அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி
 நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும்
 உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. 
உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.

                                               மே தினம் - வரலாற்று நிகழ்வு 

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான 
போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு
 மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. 
இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி 
வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன்
 முதலில் நிலைநாட்டப்பட்டது  என்பது  வரலாறு காட்டும் பாடம் ஆகும். 
எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு  நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.

                                               பெற்ற சுதந்திரம் பறி  போகிறது !

நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி
 வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால், 
 முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு 
வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப்
 படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று 
 நம்மிடமே  கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக 
கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.  

                                                 மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !

இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல்
 காக்கப் படுமானால்  என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக  வேண்டும். 
தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன 
செய்ய வேண்டும்  என்ற உணர்வு  ஒவ்வொரு  தோழனிடமும்  வெடித்துக்
 கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு
  பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் 
சக்தி  அற்ப எண்ணங்களுக்காக  பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் 
படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு  இளைஞர்களை நாம் தயார்
 செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு  நாம் செய்திடும் 
உண்மையான அஞ்சலி ஆகும்.

                                மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் ! 
                                     புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!

புரட்சிகர மே தின வாழ்த்துக்களுடன் 

                                                                          A பழனிச்சாமி , மாவட்டச் செயலர் , 
   அஞ்சல் மூன்று ,கரூர் மாவட்டம்   .

No comments:

Post a Comment